Wednesday, February 19, 2014

அத்திமரத்தின் மருத்துவ குணங்கள்

மிகச்சிறந்த மரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் மரங்களில் அத்திமரமும் ஓன்று. இந்து மதத்தில் நவகிரகங்களின் வரிசையில் சுக்கிர கிரகத்தின்  மரமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. அத்திமரங்களில் பல வகைகள் உண்டு. அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என மூன்று வகை மரங்கள்  உண்டு. அத்திமரம் அனைத்து வகையிலும் மருத்துவகுணம் உடையது. அத்திபழத்தை அப்படியே சாப்பிடமுடியாது. 

பழத்துக்குள் சிறுசிறு பூச்சிகள் இருக்கும். இதனால் பழத்தை பதப்படுத்தி சாப்பிடவேண்டும். மரத்தின் வேர் பட்டை, இலை, பாலகாய், பழம் என  அனைத்துமே மனிதன் நலமாக வாழ்வதற்கு தேவையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அத்தி இலை பித்த நோய்களை குணப்படுத்தும்.  இந்த இலைகளைத் தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் பித்த நோய் தொடர்பான அனைத்தும் குணமாகும். வாய்புண், ஈறுகளில் சீழ்வடிதல்,  உடலில் ரத்தம், வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். 

அத்திப்பால் 15 மில்லியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை கொடுத்துவர நீரிழிவு நோய் குறையும். அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்தி பழம், அத்தி பிஞ்சு, அத்திக்காய், ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் மூலம், ரத்த மூலம், வயிற்று கடுப்பு,  சீதபேதி, வெள்ளை படுதல்,  வாதநோய்கள், மூட்டு வலி சர்க்கரை நோய் தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்தும் அத்திக்காய் சாற்றை குடித்தால் சிறுநீரகக்கோளாறுகள்  நீங்கும். அத்தி மரத்தின் வேரில் இருந்து எடுக்கக்கூடிய 'கள்' சர்க்கரை மற்றும் மூலநோய்களை கட்டுப்படுத்தும். 

மரத்தின் இலையை இரவில் ஊறவைத்து காலையில் குடிநீரில் கலந்து குடித்தால் வாதநோய், மூட்டுவலி குணமாகும். மனிதர்களை நலமுடன்  வாழவைக்கும் அத்தி மரம் இந்து கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் அதவம்(அத்தி  மரம்) என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment